பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 மே, 2011

உதிர எச்சிலில் உருக்குலைய நேரிடும் உலகு!



இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக, விடுதலை வேட்கையுடன் போராடிய மாவீரர்களை 'பயங்கரவாதிகள்' என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலைஅலையாய் வந்து விழுந்துக் கொண்டே இருக்கின்றன ஈழப்போரின் கொலைக்குற்ற காட்சிகள். ஈவு இரக்கம் அற்ற - மனித மாண்பிற்கு அப்பாற்பட்ட காட்சிகளைக் கண்ட எவரும் கண்கள் நிறைந்து தலைக்குனிவர். படக்காட்சிகள் பலவற்றை வைத்துள்ள இங்கிலாந்தின் சேனல் 4 மானுட சமூகத்தின் நாகரீக வரையறைகளுக்கு உட்பட்ட காட்சிகளைத்தான் தங்களால் வெளியிட முடிந்தது என்றும் வெளியிட முடியாத அளவிற்கு காணச் சகிக்காத கொடுங்கோலங்களைக் கொண்ட படக்காட்சிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்றும் கூறி அதிரச் செய்து இருக்கிறது.
ரத்தமும், கொடூரமும் வழியும் அந்த படக்காட்சிகள் விலங்குகளாய் மனிதன் திரிந்த கற்காலத்தில் படம் பிடிக்கப்பட்டவை அல்ல. உலகத்தீரே.. நாகரிகமும், அறிவியல் முன்னேற்றமும் சொல்லில் விவரிக்க முடியாத அளவில் உயர்ந்து, தனிமனித விழுமியங்களுக்காகவும், சமாதானத்திற்காகவும் உலக சமூகம் உருவாக்கப்பட்டு வருகிறது என பறை அடித்து பாசாங்கு காட்டுகின்ற தற்காலத்தில் தான் என்று உணருங்கள்.
நிர்வாண உடல்களை பேரினவாதத்தின் அலகுகள் கொத்தி சிதைத்திருப்பதைத்தான் இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்கங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என விளக்கமளித்தன. விரிந்து கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு, மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு, தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக - இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு - சிறு முனகலோடு சிதைகிற சகோதரன், வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய் - உதிர முகத்துடன் உருக்குலைக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி, இறுகிக் கிடக்கும் உடலில் - போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்கத் துணியாமல் கண் கலங்கி நிற்கையில் - வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் சிங்களனின் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..
பேரினவாத வன்முறையினால் நம் சொந்த சகோதரியின் சிதிலமடைந்த பெண்குறியை நம் விழிகளில் உதிரம் மல்கப் பார்க்க நேர்ந்த அவலத்தினை நாம் எங்கே கொண்டு தொலைப்பது..? நம் சொந்த சகோதரியின் நிர்வாணத்தினை கண்ட பிறகும் கூட எவ்வித சலனமுமில்லாமல் மற்ற பணிகளை பார்க்கத் துணியும் எம் விழிகளை எங்கே கொண்டு புதைப்பது..? நம் கண் முன்னால் நம் சகோதரியை ஆடை அவிழ்ந்து காட்டுகிறான் எதிரி. முகத்தில் உதிரம் வழிய இறந்து கிடக்கிறாள் இசைப்பிரியா.. இசைப்பிரியா மட்டுமா அங்கு இறந்து கிடக்கிறாள்..? அல்லவே தோழர்களே.. தொன்மம் மிகுந்த - இமயத்தில் புலிக்கொடி நட்டு உலகத்தினை ஆண்ட இனத்தின் நம் தாய்தான் அங்கு அம்மணமாக வீழ்ந்து கிடக்கிறாள். உடைந்த அவளின் தலையில் இருந்து காலம் காலமாய் நமக்கு மரபாய் - பண்பாடாய் - விழுமியமாய் புகட்டப்பட்ட தாய்ப்பாலின் மிச்சம் உதிரமாக அல்லவா அந்த ஈர நிலத்தில் பாய்கிறது..? அங்கே தான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் உள்ளாடையோடு கிடக்கிறான். அங்கேதான் அம்மணமாய் பின்புறம் காட்டி கைகள் கட்டப்பட்ட மன்னன் ராசராசன் கிடக்கிறான். மானத்திற்காக மண்டியிடாத இரும்பொறை மண்டை உடைந்து மல்லாக்கக் கிடக்கிறான்.
உலக சமூகம் வரையறுத்து வைத்துள்ள அனைத்து நாகரிக சமன்பாடுகளையும் சிங்களப் பேரினவாதம் மாற்றி அமைத்து போட்டிருக்கிறது. உலகத்தினை அழிக்கக் கூடிய ரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி எவ்விதமான புற, அக ஆதாரங்களையும் கணக்கில் கொள்ளாமல் ஈராக்கின் மீது படையெடுத்து அதன் அதிபரான சதாமை அவசர அவசரமாக தூக்கில் இட்ட அமெரிக்க வல்லாதிக்கம் உள்ளிட்ட உலக நாடுகள் புகைப்படங்களாக, படப்பதிவுகளாக என மலைமலையாய் குவிந்துக் கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்ற காட்சிகளை கண்டு கண்மூடி மவுனத்திருப்பதன் நோக்கம் வெறும் பொருளாதார காரணிகள் மட்டும்தான். சகல வளங்களோடு விரிந்து கிடக்கும் தமிழரின் தாயகமான ஈழப் பெருநிலம் வல்லாதிக்கங்களைப் பொறுத்தவரையில் நாக்கில் நீர் ஊறவைக்கும் சுவையான பண்டம் ஒன்றுதான்.
தங்களின் தாயக விடுதலைக்காக களமாடிய விடுதலைப்புலிகள் இறுதிவரை கடைப்பிடித்த ஒழுங்கமைவும், மனித சமூக நலனிற்கு உட்பட்ட விழுமியங்கள் சார்ந்த மரபு வாயிலான போர் முறையையும், அதன் எதிர்வினையாக சிங்கள அரசு கடைப்பிடித்த காட்டுமிராண்டித்தனமான கொலைகளையும் உலகம் தன்னிரு கண்கள் கொண்டு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இன்றளவும் மக்களை நேசித்த - மக்களுக்காகப் போராடிய இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க எந்த நாடும் முன் வராத சூழலில் தான் - அடுக்கடுக்காக சிங்களப் பேரினவாதத்தின் போர்க்குற்றக்காட்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
உலக சமூகத்தினால் கைவிடப்பட்ட தனித்த இனமாக தமிழ் தேசிய இனம் மாறிப் போய் இருக்கிறது. உலக சமூக நலனிற்காக உருவாக்கப்பட்ட பொதுவுடைமை சித்தாந்தம் பேசும் நாடுகள் கூட ஈழப் பெருநிலத்தின் மேல் கவிழ்ந்துள்ள துயரங்களுக்கு ஆதரவு அளிக்க இயலவில்லை. மாறாக உலக மானுட மாண்புகளுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அரசின் கொடுங்கோலங்களுக்கு துணை புரிவதன் அரசியல் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக அமைந்துள்ளது.
ஈழப் பெருநிலத்தின் விடுதலை என்பது இன்று தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையாக முகிழ்ந்து இருக்கிறது என்பதுதான் நடந்து முடிந்த நான்காம் கட்ட ஈழப்போர் உலக தமிழின சிந்தனை மரபில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ்த் தேசியத் இனத்தின் ஒற்றைக் கனவாக ஈழப் பெருநிலம் மாற்றப்பட்டு விட்டது. ஈழத்தில் நிகழ்ந்திருக்கிற வன்துயரங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது நிகழ்ந்த வன்முறையை சார்ந்தவை அல்ல. மாறாக 12 கோடி மக்களாய் விரிந்திருக்கிற தமிழ்த் தேசிய இன சுதந்திர வேட்கையின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். தன் சொந்த சகோதர, சகோதரிகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடுங்கோன்மைகளுக்கு உலகச் சமூகம் பதில் தந்தாக வேண்டும் என்ற உத்வேகம் தமிழர்களின் ஆழ் மனதில் வன்மமாக உருவேறி வருகிறது என்பதற்கு சாட்சியாகத் தான் பனி கொட்டிய இரவில் இரகசியமாக வந்து இறங்க முயன்ற சிங்களப் பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவிற்கு பிரிட்டன் தமிழர்கள் அளித்த கடும் எதிர்ப்பு. மேலும் தாயக தமிழகத்திலும் ஜவுளிக் கண்காட்சியை துவக்கி வைக்க கோவை வந்த சிங்களப் பேரினவாத எம்.பியை ஓட ஓட விரட்டியடித்த பெரியார் தி.க, நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு. இனி சிங்களம் கொழும்பினை விட்டு எங்கு தரை இறங்கினாலும் உலகத் தமிழினம் பாய்ந்து எதிர்க்கும் என்பதனை சிங்களப் பேரினவாதம் உணர்ந்து நடுங்கத் துவங்கி இருக்கிறது.
ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மாவில் ஆழ்ந்த வடுக்களாக வடிவம் பெற்று வலித்துக் கொண்டிருக்கின்றன. தன் சொந்த சகோதரியின் ஆடையை அவிழ்ந்து காட்டி சிரித்து மகிழும் எதிரியின் எக்காளத்தினை தமிழனால் ஒருக்காலும் மறக்க இயலாது. தன் சகோதர சகோதரிகளின் நிர்வாணத்தினை முன்வைத்து - தன் மனிதத் தன்மையற்ற செயலால் தொன்ம தமிழின அறமனத்தின் தன்மான உணர்ச்சிக்கு சிங்களப் பேரினவாதம் விடுத்துள்ள சவாலை உலக தமிழினச் சமூகம் நேரிடையாக சந்திக்கிறது. நாகரீகங்களை உலகிற்கு போதித்த தமிழனின் வரலாற்று மனதில் ஆற்றவே இயலா கடும் காயத்தினை ஏற்படுத்தியுள்ள ஈழத்தின் இறுதி நாட்களின் ஓலம் வெறி பிடித்த விலங்காய் தமிழினத்தினை துரத்திக் கொண்டே இருக்கும். விழிகளில் வழியத் துடிக்கும் நீருடன், காயம் தந்த வன்மத்துடன் ஒரு தேசிய இனமே தன் விடுதலைக்காக இந்த உலகப் பெருவெளி சமூகத்தில் தன்னை மீண்டும் தகவமைத்துக் கொண்டு போராடத் துணிகிறது. விடுதலை குறித்த சிதைக்க இயலா நம்பிக்கைகளோடு தமிழின இளைஞர்கள் உலக வீதிகளில் பாட்டனின் புலிக் கொடியோடு அலைகிறார்கள்.
ஆனால் போர்க்குற்றம் குறித்த ஏராளமான ஆதாரங்கள் வெளியான பின்னரும் உலக சமூகத்தின் கனத்த மௌனம் தமிழ் மக்களை வெறுப்பின் வெளியில் தள்ளி இருக்கிறது. அடையாள அரசியலுக்காக வெளியிடப்படும் உலகப் பிரதிநிதிகளின் கண்டன அறிக்கைகள் தமிழ் மக்களின் மீது நிகழ்ந்துள்ள கடும் துயரங்களுக்கு போதுமானவை அல்ல. தடை செய்யப்பட்ட இரசாயான ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒரு பொய்யினைக் கூறி அவசர அவசரமாக ஒரு நாட்டின் மீது படையெடுத்து, அந்த நாட்டின் தலைவரை சிறைப்பிடித்து.. குறுகிய காலத்திற்குள் தூக்கில் ஏற்ற முடிந்த உலக வல்லாதிக்கத்தினால் அடுக்கடுக்காய் ஆதாரங்களைக் கண்டுவிட்ட பிறகும் சிங்களப் பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவினை தண்டிக்க முடியாமல் தடுமாறுவது எதனால்..?
பெருகி வழியும் தன் உதிரத்தினால் தன் மேலான சுதந்திர தாகத்தினை உலக மானுடத்தின் மனசாட்சியின் முன் நிரூபிக்கிறார்கள் தமிழர்கள். தம் தொன்மையான தாய்நிலம் பறிபோவதை காணச் சகிக்காமல் வெகுண்டெழுந்து போராடிய ஒரு தேசிய இன மக்கள் தங்களின் அளப்பரிய தியாகங்களினால் மூடிக்கிடக்கும் உலகின் கண்களைத் திறக்க முயல்கிறார்கள். சமூக நீதி மற்றும் மானுட உரிமையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதாகக் கதைக்கப்படும் உலகின் அறம் தொக்கி நிற்கும் சமூக வாழ்வின் மேல் தன் உதிர எச்சிலை உமிழ்ந்து காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அவர்களின் வலியுணராமல் - அநீதியான இந்த உலகச்சமூகத்தின் மௌனம் தொடருமானால் - குமுறி உமிழப்பட்ட அவர்களது உதிர எச்சிலில் உருக்குலைய நேரிடும் இவ்உலகு.
" ....அவர்களின் இன்றைய தேவை வெறும் வார்த்தைகளல்ல. உயர்த்திய கரங்கள் அழுத்தமாய் ஒலிக்கும் குரல்கள் சங்கிலித் தொடராய் இணைந்த கைகள் அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் அணிவகுப்புகள். "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக