பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 மே, 2011

அலையாத்தி காடுகளில் நுழைந்து திரியும் பட்டாம் பூச்சிகள்



சிப்பிகளும், சோளிகளும், மீன்களும் ஒதுங்கும் கடற்கரை மணற் பரப்புகளிலும் பாறைகளையே மிரட்சியுறச் செய்து ஓயாது வீசிக் கொண்டிருக்கும் அலைகளின் படிமங்களிலும், ஈரம் ததும்பும் காற்றின் வருடல்களிலும் புதையுண்டு கிடக்கும் உணர்வலைகளை, வாழ்வின் துடிப்புகளை இந்த திறந்த குறிப்பேடு ரகசியமாய் பாதுகாத்து வைத்திருக்கிறது. முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் தேர்வு செய்து கொண்டதொரு ஆய்வியல் அணுகுமுறை மேலிருந்து கீழ் என்றில்லாமல் வரலாற்றையும் வாழ்வையும் கீழிருந்து மேலாகக் காணும் பார்வை என்றே சொல்லலாம். மையத்திலிருந்து விலகி, விளிம்புகளில் தவித்துப் போராடிக் கொண்டிருக்கும் மீனவ மக்களின் குரலை, உரிமையை நிலை நிறுத்தும் தீட்சண்யமிக்க பார்வை.
நவீனமயமாக்கலும், பெருந்தொழில் நுட்பமும் எவ்வாறு இயற்கை சார்ந்த மீனவ வாழ்க்கையை நிலைகுலையச் செய்கிறது என்பதே மௌனமாக இக்கட்டுரைகள் எழுப்பும் ஓசையாகும். இந்த ஓசைகளினுள் மூடி பொதியப்பட்ட இழப்பின் சோகங்களை கண்டடையலாம். கட்டுமரம் - விசைப்படகு, மீன்பிடி துறைமுகம் - வர்த்தக துறைமுகம், கடலோர மீனவர் - உள்நாட்டு மீனவர், மீன்பிடித்தல் - மீன் பதனிடுதல்; சுற்றுலாத் துறை வளர்ச்சி - மீனவர் இடப் பெயர்ச்சி; அருங்கனிம மணல் அகழ்வு - கதிரியக்க உயிர்ச்சிதைவு; நிறுவன கிறிஸ்தவம் - நாட்டார் கிறிஸ்தவம் என்பதான பல்வேறு இருமைகளின் வழியாக இந்த படைப்புக்களன்கள் உருவாகி இருக்கின்றன. நீர் அரசியல், நில அரசியல் என்பதான புதுத்தளங்களையும் இது கண்டடைந்துள்ளது.
நவீன அறிவியல் தொழில் நுட்பத்தின் செல்வாக்கு சமூக கட்டமைப்பில் தீவிர தாக்கத்தை உருவாக்கும் நிலையில் மீன்பிடித் தொழிலில் அது ஏற்படுத்தும் சாதக, பாதக விளைவுகள், மீனவ பொருளாதாரத்தில் அதன் விரிவான ஆளுமை என பலநிலைகள் இங்கு ஆய்விடப்படுகிறது. 60களில் நுழைந்த விசைப்படகு தொழில் நுட்பம் இதற்கொரு சாட்சி. ஒரு திசையில் கட்டுமர, நாட்டுப்படகு மீன்பிடிப்பும், மறுதிசையில் எந்திரப்படகும், ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடிப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதிசையில் பயணத்தை தொடர்ந்தன. இந்நிலையில் கட்டுமரம் - எந்திரப்படகு - விசைப்படகு - வெளிநாட்டு ஆலைக்கப்பல் என்கிற பன்மை எதிர்வுகளில் மீன்பிடித் தொழிலில் பிரச்சினைகள் எழுந்த வண்ணம் உள்ளன. விசைப்படகு தொழில் நுட்பத்தையும், வளர்ச்சியையும் அங்கீகரிக்கும் அதே சமயம் மடிவலை கலாச்சாரத்தையும், பாரம்பரிய மீனவர் நலன்களையும் பாதுகாக்கும் பொருட்டு 12கி.மீ. உட்பட்ட கரை கடற்பகுதியில் மீன்வாரி இயக்குதலை தடை செய்தல், பருவ காலங்களில் விசைப் படகு மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல், தூண்டில் விளைவுகள் நிறுவுதல், செயற்கை மீன்வாரித்திட்டுகள் அமைத்தல் என்பதான கருத்துருவாக்கங்கள் இப்படைப்பினூடே நடைமுறைப்படுத்தலுக்காக விவாதிக்கப்படுகின்றன.
உலகமயமாக்கலும் மறுகாலனியாதிக்கமும் மீன்பிடித்தொழிலையும் மிகவும் நசிவடையச் செய்துள்ளது. இந்திய எல்லைக்குட்பட்ட கடல்களின் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு ஆலைக்கப்பல்களை மீன்பிடிக்க இந்திய அரசு அனுமதித்திருப்பது இதன் வெளிப்பாடே, வெளிநாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் தேசிய மீன் இறக்குமதிக் கொள்கையும் இந்திய மீனவத் தொழிலுக்கு பாதகத்தை உருவாக்குவதாகவே அமைந்துள்ளது. இந்த முக்கிய கருத்தாக்கங்களை இக்கட்டுரைகள் மிகவும் துல்லியமாகப் பேசுகின்றன. இவற்றை மீன்பிடி தொழிலின் உற்பத்திக் கருவிகள், உற்பத்தி சாதனங்கள், உற்பத்தி முறைகளில் ஏற்பட்டுள்ள பெரும்மாற்றங்களாக கருதலாம். ஆனால் இம்மாற்றங்கள் கடலையும், கரையையும் ஜீவாதாரமாகக் கொண்டு வாழ்கின்ற எண்ணற்ற அடித்தட்டு மீனவ மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதாகவும், பன்னாட்டு நிறுவன ஆக்ரமிப்பு, ஏகபோக முதலாளித்துவ சுரண்டலை பரிந்துரைப்பதாகவும் இருப்பதே துயரமிக்க இதன் இன்னொரு காட்சியாகும்.
மீனவ தொழில் சார்ந்து உருவாகியிருக்கும் மீன்பதனிடும் தொழிற்சாலைகள் பற்றியும் இத்தொகுப்பு பேசுகின்றது. மீனைத் துண்டுகளாக்கி தோடுகள் நீக்கி, சுத்தம் செய்து பனிக்கட்டியிலிடுதல், தரம்பிரித்தல், சிப்பம் இடுதல், எடைபோடுதல், உறையவைத்தல், புகையூட்டுதல், கொதிக்க வைத்தல், வெப்பமூட்டி நீர் அளவைக் குறைத்து டப்பாக்களில் இடுதல் மற்றும் உலர்த்துதல், உப்பிடுதல் உள்ளிட்ட பணிமுறைமைகள் அதில் ஈடுபடும் பெண் தொழிலாளர் வாழ்நிலை, இரவு நேரப்பணி, குறைந்த ஊதியம், சுகாதாரம் குறித்தும் கவனக்குவிப்பை செய்கின்றன. மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மேற்கொள்ளும் வலை பின்னுதல், ஏலமிடுதல், சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளையும் இத்தோடு இணைத்துப் பார்க்கலாம். மீனவப் பெண்களின் வேலைவாய்ப்பு சார்ந்த அம்சங்களாக கருதினாலும் கூட இவர்களுக்கான சமூக பொருளாதார பாதுகாப்பு நலத்திட்டங்கள் நடைமுறை வாழ்வில் இன்னும் உருப்பெற வேண்டிஇருக்கிறது.
நவீன பெருந்தொழில் நுட்பம் நெய்தல் நிலத்தையும், மீனவர் வாழ்வையும், இருப்பையும், இருப்பிடங்களையும், சுற்றுப்புறசூழலியலையும் அழிக்கும் ஒன்றாக பேருரு கொண்டு எழுந்துள்ளது. வர்த்தக துறைமுக உருவாக்கம். சுற்றுலா வளர்ச்சி கட்டமைப்புகள், மணல் ஆலைத் தொழில் நிறுவனங்கள், சேது சமுத்திர கால்வாய் திட்டம் என இவற்றை வரிசைப்படுத்தலாம்.
வர்த்தக துறைமுகம், பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுக பெரிய கப்பல்கள் நங்கூரமிட்டு செய்யும் ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனை சார்ந்தும், ராட்சச கிரேன்கள், டிரக்குகள், கனரக வாகனங்கள் பயன்பாடு சார்ந்தும் உருவாக்கம் கொள்கிறது. இதற்கு மாற்றாக மீன்பிடித் துறைமுகமோ, மீன்பிடி கலன்கள் பாதுகாப்பாக கரையிறங்குதல், மீன் அறுவடையை எளிதாக சந்தைப்படுத்துதல், தூண்டில் வளைவுகள், தங்குதளங்கள், செயற்கை மீன்வளத்திட்டுகள் அமைத்தல், மீன்பதனிடு நிலையங்கள், பனிக்கட்டி உற்பத்தி மையங்கள், மீன் சந்தை மையங்கள், தொலை உணர் நுட்ப நிலையம் அமைத்தல் என சகலவித மீன்பிடி சார்பு தொழில் வசதிகளை உள்ளடக்கியதாக அமைகிறது. இந்த வித்தியாசப்படுத்தலை முன்வைத்து கடற்கரை பகுதிகளில் வர்த்தக துறைமுகம் அமையுமெனில் அது பல்லாயிரக்கணக்கான பாரம்பரியமிக்க மீனவர்களின் வாழ்வையும் தொழிலையும் அழித்தொழித்து விடும் அபாயம் நேரிடும். இவ்வகையில் விவாதிக்கும் கட்டுரையாளர் வெகுஜன உளவியலில் சாதகமான வளர்ச்சி அம்சம் கொண்டதாக கருதப்படும் துறைமுகம் என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் ஒளிந்திருக்கும் மாயையையும், பேரபாயத்தையும் கட்டுடைத்துச் செல்கிறார்.
சுற்றுலா தொழில் பெயரில் கடல்வளங்கள், கடற்கரை சார் நில உரிமை மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அவை நட்சத்திர ஓய்வுகால விடுதிகளாக, ஏகபோக முதலாளித்துவ வளர்ச்சிக்கு தீனியாகப் போடப்படுகின்றன என்பதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
இயற்கை சார் உயிர் வாழ்தல் மற்றும் சூழலியல் சமன்பாட்டை குலைக்கின்ற வகையில் கடற்கரை பகுதிகளில் இடம்பெறுகிற மணல் குன்றுகளின் அழிப்பும், கழிமுக மணல் அகழ்வும் நிகழ்கிறது. இது கடற்கரை தாவரங்கள், மூலிகை வளங்கள், கடல் ஆமைகள் மற்றும் விலங்கினங்களின் வாழியல் சூழலையே முற்றிலுமாக அழித்து விடுகிறது. யுரேனியம், தோரியம் உள்ளிட்ட அணு சக்தி அருங்கனிம அகழ்வு மணல் ஆலைப் பொருளாதார நடவடிக்கைகள் பன்மடங்கு கதிரியக்க தாக்கங்களை விளைவிப்பனவாகவும் மீனவர் வாழ்வில் தீவிரமான சூழலியல் பிரச்சினைகளையும், புற்று நோய் உடலியல் சிதைவை உருவாக்குவதாகவும் அமையப் பெற்றுள்ளன. இது மரண விளிம்பில் உயிர் பற்றிய அச்சத்தை திரும்பத் திரும்ப உற்பத்தி செய்தவாறு உள்ளது.
மீனவர் வாழ்வு என்பது சமய வழிபாடுகள், பண்பாட்டு நடத்தைகள், தொன்ம நம்பிக்கைகள் என்பதான விரிவான களத்தினுள் கலாச்சார ரீதியாக கட்டமைக்கப் பட்டிருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பாக போர்ச்சுகீசிய மிஷினரி தூயசேவியர் வருகை மீனவ மக்களை கத்தோலிக்க கிறிஸ்தவத்தின்பால் பிணைத்து வைத்தது. குமரி மாவட்ட நிலவியல் எல்லைக்குள் சமய ரீதியாக கிறிஸ்தவ அடையாளமும் முக்குவர், பரவர், சவளைக்காரர் என்பதான பிற அடையாளங்களும் உருவாகின. கடல் மீனவர் என்பதான பிற அடையாளங்களும் உருவாகின. கடல் மீனவர் என்பதான எல்லை தாண்டி மீன் வணிகத்திற்காக கடலோரத்திலிருந்து இடம் பெயர்ந்த மீனவ சமூகங்கள் உள்நாட்டு மீனவர்களாகவும் அவர்கள் வசிக்கும் இருப்பிடங்கள் சவளக்கார தெருக்களாகவும் அறியப்பட்டன.
சோகத்தன்மை மனோபாவமற்ற இறக்குமதி செய்யப்பட்ட வாடகத் தலைமைகளான மத குருக்களாலும், நிதியை மட்டுமே குறி வைக்கும் தொண்டு நிறுவனங்களாலும் மீனவ சமூகத்தின் வளர்ச்சிக்கு தடைகள் உருவாவதை ஆய்வாளர் எவ்வித மனத்தடையுமின்றி கோடிட்டுக் காட்டுகிறார். எனினும் சமய பண்பாட்டு நிலைகளில் நிறுவன கிறிஸ்தவத்திற்கு மாற்றான குரல்களையும், நாட்டார் கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் தமிழகத்தில் கிறிஸ்தவத்தை பரப்புவதில் பங்களிப்பு செய்த புனிதர்கள் நினைவு சார்ந்த குருசடிகள் உள்ளிட்ட சமய பண்பாட்டு அரசியல் தன்மைகளை சாதகமாக புரிந்து கொள்வதிலும் ஆசிரியருக்கு சிரமம் இருக்கிறது. இந்த தருணத்தில் நவீனத்துவம் சார்ந்த அவர்தம் பார்வை மீனவ சடங்கியல்களில் பண்பாட்டு மானுடவியல் சார்ந்த மறுவாசிப்பினை வேண்டியே நிற்கிறது.
மீனவர் வாழ்வின் முழுமையை வெளிப்படுத்தும் மற்றுமொரு களமாக விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி நகரும் விதத்தில் அரசு அதிகாரத்தையும், அரசியல் அதிகாரத்தையும், பங்கிடுதல் குறித்த அணுகுமுறையைச் சொல்லலாம். 1989-ல் முக்குவர் இனம் மிகவும் பிற்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்பட்டதன் விளைவாக கல்வி வேலை வாய்ப்புகள் உருவாகின. பரவருக்கு இந்த உரிமை இன்னும் மறுக்கப்பட்டே உள்ளது. எனினும் இந்த இடஒதுக்கீட்டு அரசியல் அரசு நிர்வாகத்தில் பங்கேற்பு என்பதற்கான வாசலைத் திறந்தது.
இதன் இன்னொரு பரிமாணமாகவே உள்ளூர் பஞ்சாயத்து முதல் சட்டசபை எனத் தொடரும் அரசியல் அதிகாரத்தின் பங்கேற்பாளர்களாக மாறுதல் என்கிற கண்ணோட்டமாகும். இதன் ஒருமித்த குரலே தேர்தல் ஜனநாயகத்தில் தொகுதி மறுசிரமைப்பு மற்றும் கடலோர சட்டமன்ற தொகுதிகள் உருவாக்குதல் கோரிக்கையாக வலுப்பெற்று எழுகிறது. தலித்திய மற்றும் பெண்ணிய இயக்கங்களின் அரசியல் அதிகாரம் நோக்கிய பாய்ச்சலைப் போன்றே இதையும் மதிப்பிட முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக